About Me

Wednesday, June 15, 2011

Latest News ஒன்று, ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: சமச்சீர் கல்வி வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவால், அதில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும். இதர வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை பரிசீலிக்க நிபுணர் குழு அமைக்க வேண்டும். இதன் அறிக்கையை, சென்னை ஐகோர்ட்டில் இரண்டு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது.

கடந்த தி.மு.க., அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், கடந்த கல்வியாண்டில், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இந்த கல்வியாண்டில், இதர எட்டு வகுப்புகளுக்கு அமல்படுத்த, பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக பதவியேற்ற அ.தி.மு.க., அரசு, சமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாக இல்லை எனக் கூறி, அத்திட்டத்தை நிறுத்தி வைத்து அறிவித்தது. சட்டசபையில், சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தும் வகையில், சட்டத் திருத்த மசோதா கொண்டு வந்து, விவாதத்திற்கு பின், அன்றே நிறைவேற்றியது. அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்புகள், சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், தீர்ப்பு கூறிய சென்னை ஐகோர்ட், "நடப்பு கல்வியாண்டில், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுடன், இதர வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என, உத்தரவிட்டது. சென்னை ஐகோர்ட் விதித்தஇடைக்கால தடையை ரத்து செய்யக் கோரி, தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. சுப்ரீம் கோர்ட்டுக்கு, தற்போது கோடை விடுமுறை என்பதாலும், தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கவுள்ளதாலும், இந்த மனுவை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க, தமிழக அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இம்மனு மீதான விசாரணை, விடுமுறை பெஞ்ச் நீதிபதி சவுகான் மற்றும் நீதிபதி சுதந்திர குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடந்தது. தமிழக அரசு சார்பில் சீனியர் வக்கீல் பி.ஆர்.ராவ், ராஜீவ் தத்தா, குரு கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆஜராகினர். தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருந்ததாவது: கடந்த தி.மு.க., அரசு, சமச்சீர் கல்வி திட்டம் என்ற பெயரில், அதிகாரத்தை வரம்பு மீறி பயன்படுத்தி உள்ளது. முதல்வராக இருந்த கருணாநிதி எழுதிய பாட்டு, அவரது மகள் கனிமொழி நடத்திய சங்கமம் குறித்த பாடல்கள், எல்லா வகுப்பு பாடத்திட்டங்களிலும் சேர்த்துள்ளனர். கருணாநிதியின் புகழ்பாடும் பாடல்களை, ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை குழந்தைகள் கட்டாயம் படிக்கும்படி செய்துள்ளனர். இவற்றை நீக்கி, தரமான பாடல்களை பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாடத்திட்டங்களை ஆராய நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

அரசின் நடவடிக்கையை எதிர்த்து பல அமைப்புகளும், சமச்சீர் கல்வி திட்டத்தை எதிர்த்து பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பில் மூத்த வக்கீல் ஏ.கே.கங்குலி, எம்.என். கிருஷ்ண மணி, ஹரிஷ் குமார் ஆகியோர் வாதிட்டனர். கடந்த தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தும் நோக்கில், ஒரே நாளில் திருத்த மசோதாவை சட்டசபையில் கொண்டு வந்த அன்றே கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது' என்று, வக்கீல் கங்குலி வாதாடினார். அதற்கு நீதிபதிகள், "இதை நீங்கள் எதிர்க்க முடியாது. பார்லிமென்டிற்கு உள்ள அதிகாரம் சட்டசபைக்கு உள்ளது. சட்டசபை நடவடிக்கைகளில் நாங்கள் தலையிட முடியாது' என்றனர். இந்த வழக்கு விசாரணை வாதங்கள் ஒன்றரை மணி நேரம் நடந்தது.

பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

* தமிழகத்தில் சமச்சீர் கல்வியை ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு தொடர வேண்டும்.
* மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்து நிபுணர் குழு அமைக்க வேண்டும்.
* இந்த குழுவிற்கு தலைமைச் செயலர் தலைமை ஏற்க வேண்டும். எட்டு பேர் கொண்ட குழுவில் உறுப்பினர்களாக கல்வித்துறை செயலர், பள்ளிக்கல்வி இயக்குனர், கல்வித்துறையில் சிறந்த இருவர் மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் இருவர், கல்வித்துறையில் நிபுணத்துவம் பெற்ற இருவர் இடம் பெற வேண்டும்.
* நிபுணர் குழு தனது அறிக்கையை இரண்டு வாரத்திற்குள், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.
* இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள், தனது தீர்ப்பை ஐகோர்ட் வழங்க வேண்டும். அதுவரையில் இதர வகுப்புகளுக்கு பாடங்கள் நடத்துவதை நிறுத்திவைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.

No comments: