About Me

Sunday, June 19, 2011

344 அரசு நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டம் நிறுத்தம்

முந்தைய தி.மு.க., அரசு, கடைசி நேரத்தில் 344 நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அறிவித்ததை, செயல்பாட்டுக்கு கொண்டு வராமல் நிறுத்தி வைக்குமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பட்டியலை ஆய்வு செய்து, தகுதி வாய்ந்த பள்ளிகளை மட்டும் தரம் உயர்த்தும் வகையில், புதிய பட்டியலை பரிந்துரைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

முந்தைய தி.மு.க., அரசு, கடந்த மார்ச் மாதம் 1ம் தேதியிட்ட அரசாணையில், "ஊராட்சி ஒன்றியம், மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 344 நடுநிலைப்பள்ளிகள், பத்தாம் வகுப்பு வரை கொண்ட உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்' என, அறிவிக்கப்பட்டது. இந்த 344 பள்ளிகள் பட்டியலில், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசின் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும், 35க்கும் மேற்பட்ட பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இதற்கு அடுத்ததாக, முன்னாள் உணவுத் துறை அமைச்சர் வேலுவின் திருவண்ணாமலை மாவட்டத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில், 2,408 ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்கவும் முந்தைய அரசு உத்தரவிட்டிருந்தது. இவை அனைத்தும் செயல்பாட்டுக்கு வருவதற்குள், சட்டசபை தேர்தல் வந்துவிட்டது. அதனால், அனைத்துப் பணிகளும் அப்படியே நிறுத்தப்பட்டன. இந்நிலையில், தி.மு.க., அரசு எடுத்த நடவடிக்கை குறித்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சண்முகம் ஆய்வு நடத்தினார். தகுதியில்லாத பல நடுநிலைப்பள்ளிகள், தரம் உயர்த்தப்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருப்பதை அமைச்சர் கண்டுபிடித்தார். இதையடுத்து, 344 நடுநிலைப் பள்ளிகளையும், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டாம் என்றும், இது தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த அரசு உத்தரவை, நடுநிலைப்பள்ளிகளில் இருந்து திரும்பப் பெறுமாறும், அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், 344 பள்ளிகளையும் ஆய்வு செய்து, அதில் தகுதி வாய்ந்த பள்ளிகளை மட்டும் தனியாக தேர்வு செய்து, புதிய பட்டியல் அளிக்குமாறும், தகுதியில்லாத பள்ளிகளை பட்டியலில் இருந்து நீக்குமாறும் அரசு கூறியுள்ளதாக, ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பான பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன.

இதற்கிடையே, நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்பதால் மாணவர்கள், வேறு பள்ளிகளில் சேரும் திட்டத்தைக் கைவிட்டிருந்தனர். ஆனால், அத்திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, "டிசி' வழங்கிக் கொண்டிருப்பதாக, அரசு நடுநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் தெரிவித்தனர். தரம் உயர்த்தப்படும் நடுநிலைப்பள்ளிகள் குறித்து புதிய பட்டியல் தயாரானதும், அவை வரும் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்படும் எனக் கூறப்படுகிறது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=260059

thanks to:

No comments: