About Me

Thursday, July 21, 2011

சமச்சீர் கல்விக்கு தடை இல்லை : சுப்ரீம் கோர்ட்

சமச்சீர் கல்வி தொடர்பாக ஐகோர்ட் அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் பாடப்புத்தகங்களை விநியோகிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சமச்சீர் கல்வித்திட்ட வழக்கில், சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். மேலும் வரும் 2ம் தேதிக்குள் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை விநியோகிக்கவும் உத்தரவு பிறப்பித்தார். 


தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் சமச்சீர் கல்வி தொடரட்டும் என்ற சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. இதனால் சமச்சீர் கல்வியே நடப்பாண்டில் நடைமுறைக்கு வரும் என தெரிகிறது. 

சமச்சீர் கல்வியில் தரம் இல்லையென்றும், இதனை அமல்படுத்த முடியாது என்றும் தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட் மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்ப்பளித்தது.


தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. இந்த மனு தொடர்பாக இன்று விசாரித்த ஜே.எம்,. பாஞ்சால் தலைமையிலான பெஞ்ச் நீதிபதிகள் , சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். வரும் ஆகஸ்ட் 2 ம் தேதிக்குள் பாடப்புத்தகங்களை விநியோகம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.


ஜூலை 26ம் தேதி இறுதி விசாரணை : கடந்த திங்கட்கிழமை சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பில் 22 ம் தேதிக்குள் பாடப்புத்தம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதற்கு கால அவகாசம் போதாது என்றும் அரசு தரப்பில் கோரப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வரும் 2 ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளனர். வரும் ஜூலை 26ம் தேதி இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்நாளில் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.


அரசு தரப்பில், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அவசரமாக தயாரிக்கப்பட்டது , கல்வித்தரம் உயராது என்றும், எதிர் மனுதாரர் தரப்பில் சமச்சீர் கல்வியில் எந்தக்குறையும் இல்லை, ரூ. 200 கோடியில் 9 கோடி புத்தகங்கள் தயாராக உள்ளது. காலம் தாமதித்தால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவர் என்றும் வாதிடப்பட்டது.


நிபுணர்கள் குழு அமைத்து அறிக்கை விவரம் பெற்று சென்னை ஐகோர்ட்டே முடிவு செய்யலாம் என்று கடந்த முறை அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட போதே மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:

No comments: