About Me

Wednesday, September 7, 2011

பட்டதாரி ஆசிரியர் நியமனம்: புதிய பட்டியல் இன்று வெளியீடு (7.9.11)

சென்னை, செப். 6: தமிழக அரசு இந்த ஆண்டு புதிதாக 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாக பேரவையில் அறிவித்துள்ளது. இவர்களைத் தேர்ந்தெடுத்து நியமிக்கும் பொறுப்பில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் ஆள் பற்றாக்குறையால் கடும் சவாலை எதிர்நோக்கி உள்ளது.

 ஆறாயிரம் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யவே ஏறத்தாழ ஓராண்டு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 56 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமிக்க எத்தனை ஆண்டுகள் தாமதம் ஏற்படுமோ என்று பட்டதாரி ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
 ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அதிகாரிகள், ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் தவிர, இவ்வளவு ஆசிரியர்களை ஓராண்டுக்குள் நியமிக்க சாத்தியமே இல்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 இதுதொடர்பாக, அந்த வட்டாரங்கள் மேலும் கூறியது:
 ஆண்டுக்கு சராசரியாக 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆசிரியர்கள் வரை இப்போது நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 56 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் நீண்ட காலதாமதம் ஏற்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருக்கும் குறைவான ஊழியர்களே இதற்குப் பிரதான காரணம்.
 நீதிமன்ற வழக்குகள், வேலைவாய்ப்பு அலுவலகம் அவ்வப்போது அனுப்பும் பட்டியல்கள் என பிற காரணங்கள் இருந்தாலும், ஆள் பற்றாக்குறையே முக்கியக் காரணமாக உள்ளது.
 ஓவ்வொரு ஆண்டும் படிப்படியான நியமனத்திலேயே அதிக கால தாமதம் ஆனது. ஆனால், ஒட்டுமொத்தமாக இவ்வளவு ஆசிரியர்களை, மிகவும் குறைந்த ஊழியர்களை வைத்து நியமனம் செய்வது சாத்தியமில்லாதது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 மொத்தம் 17 பேர்: ஆசிரியர் தேர்வு வாரியத்தில், தலைவர், இயக்குநர் அந்தஸ்தில் 2 அதிகாரிகள், 2 இணை இயக்குநர்கள், 2 பிரிவு கண்காணிப்பாளர்கள், 6 எழுத்தர்கள், 4 அலுவலக உதவியாளர்கள் என மொத்தம் 17 பேர் பணியாற்றுகின்றனர். இவர்கள்தான் கடந்த 5 ஆண்டுகளில் 56 ஆயிரம் ஆசிரியர்களை நியமித்துள்ளனர்.
 ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஊழியர்களை அதிகரிக்க வேண்டும் என்று கடந்த காலங்களில் பலமுறை பரிந்துரைகள் அனுப்பப்பட்டதாகவும், ஆனால், அப்போதைய அரசு அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
 என்ன தேவை? தேர்வுக் கட்டுப்பாட்டாளர், 2 கண்காணிப்பாளர்கள், 8 எழுத்தர்கள், ஒரு கணக்கு அலுவலர் என குறைந்தபட்சம் 12 அலுவலர்களையாவது கூடுதலாக நியமிக்க வேண்டும்.
 ஆசிரியர் நியமனத்தை விரைந்து முடிக்க வேண்டுமானால் இன்னும் அதிகமான ஊழியர்கள் நிச்சயமாகத் தேவை என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
 தமிழக அரசின் அறிவிப்பால் மாணவர்களும், சமுதாயமும் உடனடியாகப் பயனடைய வேண்டும் என்றால் ஆசிரியர் தேர்வு வாரிய ஊழியர்களின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்க வேண்டும். இதை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

பட்டதாரி ஆசிரியர் நியமனம்: புதிய பட்டியல் இன்று வெளியீடு
 பட்டதாரி ஆசிரியர் நியமன புதிய பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் புதன்கிழமை முதல் படிப்படியாக வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இதுதொடர்பாக, அவர்கள் கூறியது:
 முதலில் 6 பாடங்களுக்கான ஆசிரியர்களின் பட்டியலும், அதன்பிறகு 3 பாடங்களுக்கான ஆசிரியர்கள் பட்டியலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ட்ற்ற்ல்://ற்ழ்க்ஷ. ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
 வரும் வெள்ளிக்கிழமைக் குள் முழுமையானப் பட்டியல் வெளியிடப்பட்டு விடும். ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் மிகவும் வெளிப்படையாக இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பதிவுமூப்பு, தகுதிகள் உள்ளிட்ட விவரங்களை மற்றவர்களும் பார்க்கும் வகையில் இணையதளத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
 பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, ஆசிரியர் பணி நியமன ஆணை அனைவருக்கும் உடனடியாக அனுப்பப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
 இதன்மூலம் ஏறத்தாழ 6 ஆயிரம் பேரின் 8 மாத காத்திருப்பு முடிவுக்கு வர உள்ளது.
 பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான பணிகள் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்தும் நிறைவடைந்து கடந்த பிப்ரவரியில் பணி நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டது.
 ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பணி நியமன ஆணை அனுப்பப்படவில்லை. இந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மேலும் சிலர் பணி நியமனத்துக்குப் பரிசீலிக்கப்பட்டு புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
 வேலைவாய்ப்பு அலுவலகம் குழப்பம்: இந்தப் பணி நியமனத்துக்காக வேலைவாய்ப்பு ஆணையர் அலுவலகம் ஏறத்தாழ 5 முறை பட்டியல்கள் அனுப்பியது. பணி நியமன இறுதிப்பட்டியலைத் தயாரிப்பதில் கால தாமதத்துக்கு இதுவும் ஒரு காரணம்.
 கடந்த 10 நாள்களுக்கு முன்புகூட புதிதாக ஒரு பட்டியலை வேலைவாய்ப்பு அலுவலகம் அனுப்பியுள்ளது. இறுதியாகப் பட்டியல் அனுப்பாமல் இதுபோன்று அவ்வப்போது பட்டியல் அனுப்புவதால், வேலைவாய்ப்பு அலுவலகம் ஏதேனும் குளறுபடி செய்கிறதோ என்ற கவலையும் பட்டதாரி ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
 இந்தக் குழப்பத்தை நீக்கும் வகையில் ஒரேயொரு பட்டியலை வேலைவாய்ப்பு அலுவலகம் அனுப்ப வேண்டும் என்று அனைவரும் கோருகின்றனர்.

No comments: