About Me

Wednesday, November 23, 2011

மாவட்ட கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலி

சென்னை, நவ.22: தமிழகம் முழுவதும் 27 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும், 45 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. இதன்காரணமாக, கல்வித் துறைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
 பல கோடி ரூபாய் மதிப்பிலான அனைவருக்கும் கல்வித் திட்டப் பணிகள், புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் பணிகள், இலவச லேப்-டாப், இடைநிற்றலைக் குறைப்பதற்காக மாணவர்களுக்கு ஊக்கத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்தான் செயல்படுத்த வேண்டும்.  அதோடு, அந்தந்த மாவட்டங்களில் கல்விப் பணிகள் தொடர்பான பல்வேறு முடிவுகளையும், கற்றல், கற்பித்தல் பணிகள் தொடர்பான ஆய்வுகளையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.  மாவட்ட கல்வி அலுவலர் பதவியிடங்கள் உயர் நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் பதவி உயர்வு மூலமாகவும், அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடியாகவும் நிரப்பப்படுகின்றன.  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பதவியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவே நிரப்பப்படுகின்றன.  தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் மொத்தம் 64 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் உள்ளன.  வருவாய் மாவட்டங்களுக்கு 32 பேரும், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் 32 பேரும் பணியாற்றுகின்றனர். இந்தப் பதவிகளில் மொத்தம் 27 இடங்கள் காலியாக உள்ளன.  இரண்டு பதவியிடங்களும் காலி: புதுக்கோட்டை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பதவிகளும், மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளும் காலியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  இந்த மாவட்டங்களில் பொறுப்பு அதிகாரிகள் மட்டுமே திட்டப் பணிகள், கல்விப் பணிகளை மேற்பார்வையிடும் நிலை உள்ளது.  அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான பணத்தைக் கையாள்வதற்கு இவர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் அனைவருக்கும் கல்வித் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் புகார் தெரிவித்தனர்.  பிப்ரவரியில் தயாரான பட்டியல்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பதவிகளுக்குத் தகுதியானவர்களின் பட்டியல் கடந்த பிப்ரவரி மாதம் தயாரிக்கப்பட்டது. பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் தலைமையிலான குழு இந்தப் பட்டியலைத் தயாரித்தது. மொத்தம் 47 பேர் இடம்பெற்றிருந்த இந்தப் பட்டியலில் 24 பேர் உடனடியாகப் பதவி உயர்வு பெற்றனர். மீதமுள்ளவர்களுக்கு இன்று வரை பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.  இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களில் 3 பேர் ஏற்கெனவே ஓய்வுபெற்றுவிட்டனர்.  மாநிலம் முழுவதும் 27 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பதவியிடங்கள் காலியாக உள்ளன. 20 பேர் கொண்ட பட்டியல் தயாராக இருந்தும் இதுவரை அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாதது ஏன் என்றே தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  69 பேர் கொண்ட பட்டியல் தயார்: மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் என மொத்தம் 65 கல்வி மாவட்டங்களில் மொத்தம் 180 பணியிடங்கள் உள்ளன. இதில் 45 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.  முதன்மை கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு பெறுவதால் காலியாகும் இடங்கள் உள்பட மொத்தம் 69 மாவட்ட கல்வி அலுவலர் பதவியிடங்களுக்குத் தகுதியான உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், பதவி உயர்வு மட்டும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.  இடைநிலை ஆசிரியர்கள் முதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வரை அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வும், பணியிட மாறுதலும் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பணியிட மாறுதலோ, பதவி உயர்வோ வழங்கப்படாதது ஏன் என்றே தெரியவில்லை என்று மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  இந்த இடங்களை நிரப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறைக்கு பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல்வரோ, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரோ இதில் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.  அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கல்வித் துறையின் முக்கிய முடிவுகளும், அரசு அறிவித்திருக்கும் நலத்திட்டங்களும் மாணவர்களைத் தடையின்றி சென்று சேரும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

thanks : tnbten.blogspot.com

No comments: