About Me

Thursday, November 17, 2011

முப்பருவ, தொடர் மதிப்பீட்டு முறைகளுக்கு ஏற்றவாறு புதிய புத்தகங்கள்

அடுத்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்த உள்ள முப்பருவ முறை, தொடர் மதிப்பீட்டு முறைக்கு ஏற்றவாறு புதிய புத்தகங்களை வடிவமைக்கும் பணியில் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சமச்சீர் கல்வி புத்தகங்களில் பிழைகளை நீக்குவது,
மேம்படுத்துவது தொடர்பான பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்துவிட்டன. இது தொடர்பான அறிக்கைகள் விரைவில் பாடப் புத்தகக் குழுக்களுக்கு அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட சமச்சீர் பாடப் புத்தகங்கள் தரமானதாக இல்லை என்று கூறி, சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதை தள்ளிவைக்க அரசு முடிவு எடுத்தது. பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில், சமச்சீர் கல்வி பத்தாம் வகுப்பு வரை உடனடியாக அமல்படுத்தப்பட்டது.

எனினும் மாணவர்களுக்குத் தரமான புத்தகங்களையும், கல்வியையும் வழங்குவதற்காக அடுத்த கல்வியாண்டு முதல் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் புத்தக சுமையைக் குறைக்கும் வகையில் முப்பருவ முறை, அவர்களை முழுமையாக மதிப்பிடுவதற்காக தொடர் மதிப்பீட்டு முறை உள்ளிட்ட திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இதற்காக பிழைகளற்ற, புதிய திட்டங்களை உள்ளடக்கிய புத்தகங்களைத் தயாரிக்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறியது:
சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 23 குழுக்கள் அமைக்கப்பட்டன. ஏறத்தாழ 50 ஆசிரியர்களைக் கொண்ட இந்தக் குழுவினர் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை முழுவதுமாக வாசித்து அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரகத்துக்கு அறிக்கைகள் அனுப்பினர்.

ஒவ்வொரு பாடத்துக்கும் ஏறத்தாழ 32 அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடத்துக்குமான 32 அறிக்கைகளை ஒரே அறிக்கையாக தொகுக்கும் பொறுப்பு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரே அறிக்கையாகத் தயாரித்த பிறகு சம்பந்தப்பட்ட பாடநூல் குழுவின் தலைவருக்கு அந்த அறிக்கை அனுப்பப்படும். அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து அவரே இறுதி முடிவு எடுப்பார்.

தொடர் மதிப்பீட்டு முறை:
வரும் கல்வியாண்டில் 8-ம் வகுப்பு வரை தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அடுத்த கல்வியாண்டில் 9,10-ம் வகுப்புகளுக்கும் இது விரிவுபடுத்தப்படுகிறது.

பாடப் புத்தகங்களில் எங்கெங்கு உடனடி மதிப்பீடு மற்றும் மொத்த மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்பதைப் பரிந்துரைக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பாடப் புத்தகங்களை ஆய்வு செய்து வருகின்றனர். அதோடு சி.பி.எஸ்.இ. அறிமுகப்படுத்திய தொடர் மதிப்பீட்டு முறையில் உள்ள குறைகளையும், அதை எவ்வாறு மேம்படுத்துவது என்பது தொடர்பாகவும் இவர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

முப்பருவ முறை: ஒவ்வொரு பாடப் புத்தகத்திலும் திருத்தங்கள் மேற்கொண்ட பிறகு அவற்றை முப்பருவ முறைக்கு ஏற்றவாறு மூன்றாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு பருவத்துக்கும் எந்தளவு பாடங்களைச் சேர்க்கலாம் என்பது குறித்து ஒரு குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர்.

பிழைகள் திருத்தப்பட்ட புத்தகங்கள் வந்த பிறகு அவை மூன்றாகப் பிரிக்கப்படும். மூன்றாகப் பிரிக்கப்படும் புத்தகத்தில் தொடர் மதிப்பீட்டு முறைக்குத் தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.

இறுதியாக அவை சரிபார்க்கப்பட்ட பிறகு புத்தகங்களை அச்சிடுவதற்காக தமிழ்நாடு பாடநூல் கழகத்திடம் சி.டி.க்கள் ஒப்படைக்கப்படும். 9,10 வகுப்புகளுக்கான புத்தகங்களை அச்சிடும் பணிகள் முதலில் தொடங்கி நடைபெறும். அதன்பிறகு பிற வகுப்புகளுக்கான புத்தகங்கள் அச்சிடப்படும்.

புத்தகங்கள் அச்சடித்து வந்த பிறகு, தொடர் மதிப்பீட்டு முறையில் எவ்வாறு கல்வி கற்பிப்பது என்பது குறித்து மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
 
நன்றி:

No comments: