About Me

Saturday, January 7, 2012

1 முதல் 8ம் வகுப்பு வரை புதிய பாடங்கள் கிடையாது : 9, 10ம் வகுப்புகளுக்கு திருத்தப்பட்ட பாடங்கள்

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான திருத்தப்பட்ட பாடங்களில், புதிய பாடங்கள் சேர்க்கப்படவில்லை. மேலும், பள்ளியிலேயே செய்முறை
பாடங்களை மாணவர்கள் செய்து முடிக்கும் வகையில், பாட திட்டம் அமைந்து வருகிறது என்று, ஆசிரியர் பயிற்சி இயக்குனர் தெரிவித்தார். தற்போது, பாடங்களில் பிழைத் திருத்தும் பணி நடந்து வருகிறது. இதன் முதல் கட்டமாக, ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு பாடப் புத்தகங்களில் உள்ள குறைகள் மற்றும் பிழைகளை நீக்கி, திருத்தப்பட்ட புதிய பாடப் புத்தகங்களுக்கான, "சிடி'க்களை, பாடநூல் கழகத்திடம், ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் ஒப்படைத்துள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பிற்கான திருத்தங்கள் மற்றும் செயல்முறை பாடங்கள் அடங்கிய பாட புத்தகங்களின் முதல் தொகுதியை, பிப்ரவரியில் வழங்கிட, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது.

40 ஆயிரம் ஆசிரியர்கள் : ஆட்சி மாற்றத்திற்குப் பின், கருணாநிதி எழுதிய படைப்பு மற்றும் தி.மு.க., குறித்த பாடப் பகுதிகள் உடனடியாக நீக்கப்பட்டன. மேலும், பாடங்களில் அதிகளவில் எழுத்து மற்றும் கருத்துப் பிழைகள் இருப்பது கண்டறியப் பட்டது. இக்குறைகளை சரிசெய்து, திருத்திய பாடப் புத்தகங்களின், "சிடி'க்களை தயாரிக்க, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்திற்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. பாடப் புத்தகங்களில் உள்ள குறைகளை சரி செய்யும் பணிகளில், 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய பாடங்கள் கிடையாது : ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை திருத்தும் பணிகளும், எந்தெந்த செய்முறை திட்டங்களை சேர்க்கலாம் என்பது குறித்தும், தற்போது இயக்குனரகம் ஆலோசித்து வருகிறது.

ஆசிரியர் பயிற்சி இயக்குனர் தேவராஜன், இது குறித்து கூறியதாவது: ஏற்கனவே உள்ள பாடப் புத்தகங்களில், புதிதாக எந்தப் பகுதிகளையும் சேர்க்கவில்லை. பாடங்களில் உள்ள சில வகை பிழை, குறைகளை மட்டும் நிவர்த்தி செய்து, சரியான கருத்துக்களை சேர்த்துள்ளோம். சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், செய்முறைத் திட்டங்களை மாணவர்களே சிந்தித்து உருவாக்குவதற்குப் பதில், பெரும்பாலும் பெற்றோர் தான் செய்து கொடுக்கின்றனர். இதனால், மாணவர்களின் சுய சிந்தனைத் திறன் மேம்படாது. எனவே, செய்முறை திட்டங்களை, வகுப்புகளிலேயே மாணவர்கள் செய்யும் வகையில் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து, ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு தேவராஜன் கூறினார்.

Thanks : Dinamalar

No comments: