About Me

Wednesday, January 18, 2012

மாணவர்களுக்கு சலுகை அறிவிப்பு

 தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
’’கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை
என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப கல்வியே மிகச் சிறந்த செல்வம் என்று சொன்னால் அது மிகையாகாது. கல்வியானது நற்பண்புகளையும், நல்ல குறிக்கோள்களையும் குழந்தைகளிடையே விதைத்து அவர்களை  சமுதாய உணர்வு உள்ள நல்ல குடிமக்களாக உருமாற வழிவகை செய்கிறது.


இதனை நன்கு உணர்ந்த முதலமைச்சர்  ஜெயலலிதா, மாநிலத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளும் தரமான கல்வியை,  அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் நிறைந்த இன்பமான  சூழ்நிலையில் பெறுவதற்கான  பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதன் அடிப்படையில் 201213 ஆம் கல்வியாண்டு முதல் தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள்,

நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள் ஆகியவற்றில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ்  1வது  வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு,

தற்பொழுது வழங்கப்பட்டு வரும் இரண்டு இணை சீருடையுடன் கூடுதலாக இரண்டு இணை சீருடை அதாவது மொத்தம் நான்கு இணை சீருடை வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இதில் 6ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயிலும் மாணவர்களுக்கு அரைகால் சட்டைக்கு பதிலாக முழுக் கால்சட்டையும், மாணவியர்களுக்கு பாவாடை தாவணிக்குப் பதிலாக சல்வார்கமீசும் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இதன் மூலம் 23 லட்சத்து 33 ஆயிரத்து 418 மாணவர்களும், 23 லட்சத்து 51 ஆயிரத்து 660 மாணவிகளும் என மொத்தம் 46 லட்சத்து 85 ஆயிரத்து 78  பள்ளி மாணவ மாணவியர் பயன் பெறுவர். இதனால் அரசுக்கு  259 கோடியே 95 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

 மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1வது வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கு விலையில்லா ஒரு இணை காலணி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1வது வகுப்பு  முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 35 லட்சத்து 556  மாணவ, மாணவியர், ஒவ்வொருவருக்கும்  96 ரூபாய் மதிப்பில், 1 இணை காலணியும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும்  27 லட்சத்து 95ஆயிரத்து 639 மாணவ, மாணவியர், ஒவ்வொருவருக்கும் 127 ரூபாய் மதிப்பில்,  1 இணை காலணியும், 9 மற்றும் 10 ஆம் வகுப்பு  பயிலும் 18 லட்சத்து 5ஆயிரத்து 933  மாணவ மாணவியர், ஒவ்வொருவருக்கும் 142 ரூபாய் மதிப்பில்  ஒரு இணை காலணியும், இந்த ஆண்டே வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


இந்த விலையில்லா காலணி வழங்கும் திட்டத்திற்காக அரசுக்கு 94 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம்  81  லட்சத்து 2 ஆயிரத்து 128 மாணவ, மாணவியர் பயன் பெறுவர். இவையன்றி, மாணவ, மாணவி யர்களிடம் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் நல்லெண்ணத்துடன், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள்,

கற்றலுக்குத் தேவையான கணித உபகரணப் பெட்டி (ஜாமென்ட்ரி பாக்ஸ்), கிராமப்புற மாணவ, மாணவியருக்கு இதுவரை கிடைக்கப் பெறாத வண்ணப் பென்சில்கள் மற்றும் புவியியல் படங்கள் ஆகியவற்றை  வரும் கல்வியாண்டு முதல், அதாவது 201213 முதல் வழங்கவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இத்திட்டத்தின்படி 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு  75 ரூபாய் மதிப்புள்ள புத்தக பைகளும், 4 முதல் 7ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு 100 ரூபாய் மதிப்புள்ள புத்தக பைகளும்,  8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு 125 ரூபாய்  மதிப்புள்ள புத்தக பைகளும் வழங்கப்படும்.  இத்திட்டத்தினால்  92 லட்சத்து 28 ஆயிரத்து 374 மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.

இத் திட்டத்திற்காக அரசுக்கு 201213 ஆம் கல்வியாண்டில் 136 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த  மாணவ மாணவியர் பொதுத் தேர்வுகளில் அதிக அளவு மதிப்பெண்கள் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில்,  மாவட்ட அளவில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வரும்  முதல் பரிசான 1,500 ரூபாயை  3,000 ரூபாயாகவும், 

இரண்டாம் பரிசாக வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாயை, 2,000 ரூபாயாகவும், மூன்றாம் பரிசாக வழங்கப்பட்டு வரும் 500 ரூபாயை 1,000 ரூபாயாகவும், 12 ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் மாணவ மாணவியர்களுக்கு  முதல் பரிசாக வழங்கப்பட்டு வரும்  3,000 ரூபாயை 6,000 ரூபாயாகவும், இரண்டாம் பரிசாக வழங்கப்பட்டு வரும் 2,000 ரூபாயை 4,000 ரூபாயாகவும், மூன்றாம் பரிசாக வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாயை 2,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இதனால் அரசுக்கு 11 லட்சத்து 52 ஆயிரம்  ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.

மாணவ, மாணவியர்  நலன்களுக்காக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகள் மூலம் பள்ளிகளில், குறிப்பாக கிராமங்களில் உள்ள பள்ளிகளில்  சேரும் மாணவ, மாணவியர்  எண்ணிக்கை அதிகரிக்கவும், இடைநிற்றல் முழுவதுமாக தடுக்கப்படவும் வழிவகுக்கும்’’என்று கூறப்பட்டுள்ளது.

No comments: