About Me

Sunday, October 7, 2012

பள்ளி கட்டட பணிகள்: தலைமையாசிரியர்கள் போர்க்கொடி

பள்ளிகளில், அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம். எஸ்.ஏ.,) திட்டம் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டட பணிகளுக்கான பொறுப்பில் இருந்து, தலைமை ஆசிரியர்களை விடுவிக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் 2009ல் இருந்து, மத்திய அரசு நிதி மூலம் செயல்படும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் சார்பில், மக்கள் தொகை, பள்ளிகளிடையே உள்ள தூரம் போன்ற சில வரையறைகள் படி, நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன.

இதன்படி, 2009௨010ல் 200, 2010௨011ல் 344, 2011௨012ல் 710 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. இதில், முதலில் உயர்த்தப்பட்ட 200 பள்ளிகளுக்கு மட்டும், கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 49 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

இதன்படி, கட்டட பணிகளை தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர், வார்டு/ஒன்றிய உறுப்பினர், பெற்றோர் ஆசிரியர் கழக (பி.டி.ஏ.,) உறுப்பினர், என்.ஜி. ஓ.,வை சேர்ந்த ஒருவர் என, "ஐவர் குழு&' கண்காணிக்க வேண்டும். இதில், காசோலை "பவர்&', தலைமையாசிரியர் மற்றும் பி.டி.ஏ., உறுப்பினரிடம் அளிக்கப்பட்டது.

ஆனால், தலைமையாசிரியர்களுக்கும், பி.டி.ஏ., உறுப்பினருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பல இடங்களில் கட்டட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன. மேலும், கட்டுமான தொழில் நுட்பம் தெரியாததால், ஒப்பந்ததாரர் கட்டியதுதான் கட்டடம். அவை தரமானதாக இல்லாவிட்டால் அதற்கு, பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கும், நிம்மதியாக ஓய்வு பெறமுடியாத சூழ்நிலையில் உள்ளதாகவும் தலைமையாசிரியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில பொது செயலாளர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது: ஒரு பள்ளிக்கு ஒதுக்கப்படும் 49 லட்சம் ரூபாயில், 13 வகுப்பறைகள் கட்ட வேண்டும். அதற்கு 70 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இதை சமாளிக்க முடியாமல் பல தலைமையாசிரியர்கள் விருப்ப ஓய்வில் சென்றுவிட்டனர்.

எனவே, 2010- 2011, 2011- 2012ல் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கான கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணிகளை, தலைமையாசிரியர்களிடம் அளிக்க கூடாது. அதற்கென தனி வாரியம் அமைத்தோ அல்லது பொதுப் பணித்துறை, காவலர் வீட்டு வசதி வாரியத்திடமோ ஒப்படைக்க வேண்டும். அப்படி நடந்தால், தலைமையாசிரியர்களின் கற்பித்தல் மற்றும் மேற்பார்வை பணிகள் பாதிக்காது. அவர்களுக்கு, தேவையில்லாத மன உளைச்சலும் ஏற்படாது, என்றார்.

No comments: