டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டதாக
போலீஸார், ஆறு பேரை கைது செய்துள்ளனர். மேலும் பலரிடம் விசாரணை நடத்தி
வருகின்றனர். இந்நிலையில், வினாத்தாள் உண்மையில் அவுட்டானதாகவும், அந்த
தகவலை போலீஸார் மறைப்பதாகவும், இந்த விவகாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய
அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த, 17
மற்றும், 18ம் தேதிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு
(டி.இ.டி.,) தேர்வு நடந்தது. கடந்த, 17ம் தேதி தர்மபுரியில் வினாத்தாள்
கொடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர், இரண்டு பேர் உள்ளிட்ட,
ஆறு பேரை தர்மபுரி தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் சிலரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை
நடத்தி வருகின்றனர். கடந்தாண்டு, குரூப் 2 தேர்வின் போது, தர்மபுரி மற்றும்
ஈரோட்டில் இத்தேர்வுக்கான விடைத்தாள் அவுட்டானது. இது தொடர்பாக தர்மபுரி,
ஈரோடு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களை போலீஸார்
கைது செய்தனர். இந்த வழக்கு தற்போது, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணையில்
உள்ளது.
டி.இ.டி., தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே,
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வினாத்தாள் கொடுப்பதாக ஒரு கும்பல்,
வினாத்தாளுக்கு, 8 லட்ச ரூபாய் வரை விலை பேசி வந்தனர். இதனால், தேர்வுக்கு
முன் ஒரு வாரமாக இரு மாவட்டத்திலும், தேர்வு எழுதுவோர் மத்தியில் பெரும்
பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், போலீஸார் வினாத்தாள் மோசடி
செய்திருப்பதாக, ஆறு பேரை கைது செய்த போதும், இதில், பலருக்கு தொடர்பு
இருப்பது தெரிய வந்துள்ளது. வினாத்தாள் அவுட்டானால் பெரும் பிரச்னை வரும்
என்பதால், மோசடியில் ஈடுபட்ட கும்பல், வினாத்தாள் ஜெராக்ஸ் உள்ளிட்ட எந்த
பிரதிகளையும் பணம் பெற்றவர்களிடம் கொடுக்காமல், பணம் பெற்றவர்களை
குறிப்பிட்ட இடத்துக்க வரவழைத்து, குறிப்பிட்ட வினாக்களை வாய் மூலமாக கூறி,
தேர்வுக்கு தயார் செய்துள்ளனர்.
வினாத்தாள் ஜெராக்ஸ் உள்ளிட்டவைகள் வெளியான
தேர்வு ரத்தாகும். மேலும் சட்ட ரீதியாக உறுதி செய்வதில் இருந்து தப்பிக்க,
மோசடி கும்பல் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. வினாத்தாள்
அவுட்டானதற்கான ஆதாரங்களை போலீஸார் கைப்பற்ற முடியாத நிலையில், வினாத்தாள்
மோசடி என, வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கு தொடர்பு?
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம், நான்கு மாதிரி வினாத்தாள்கள் தயார்
செய்யப்பட்டு, அந்த வினாத்தாள்களில் ஒன்றை தேர்வு நடக்கும் போது வினியோகம்
செய்வது வழக்கம். மோசடி கும்பல் நான்கு வினாத்தாளுக்குரிய கேள்விகளையும்
பணம் பெற்றவர்களிடம் வாய் மொழியாக கூறி தேர்வுக்கு தயார் செய்துள்ளனர்.
இந்த மோசடியில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ள அலுவலர்களுக்கும் தொடர்பு
இருப்பதாக கூறப்படுகிறது. பணம் கொடுத்து பலரும் தேர்வுக்கு வரும்
வினாக்களை பெற்று தேர்வு எழுதியிருப்பதால், தர்மபுரி மாவட்டத்தில் அதிகம்
பேர் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது.
மோசடி கும்பல் கொடுத்த வினாக்களில், 80 முதல்,
120 கேள்வி வந்திருப்பதாக கூறப்படுகிறது. வினாத்தாள் அவுட்டான
விவகாரத்துக்கு, உரிய ஆதாரங்கள் இல்லாத நிலையில், போலீஸார் இந்த வழக்கில்
மேலும் தொடர்புடைய பலரை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த கும்பல் கடைசி நேரத்தில், பணம் பெற்று
கொண்டு, மொபைல்ஃபோன் மூலம் வினாக்களை பணம் வாங்கியவர்களிடம்
கூறியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எது எப்படி என்றாலும்,
மோசடி கும்பல் சட்ட ரீதியாக சிக்க கூடாது என்பதிலும், வினாத்தாள்
அவுட்டானால், மறு தேர்வு நடக்கும் அதை தவிர்க்கும் வகையில் மோசடியில்
ஈடுபட்டிருப்பது, அரசு துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி
உள்ளது.
No comments:
Post a Comment