About Me

Tuesday, August 9, 2011

சமச்சீர் கல்வி வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவு : அரசும், பெற்றோரும் எதிர்பார்ப்பு

சென்னை: மாணவர்கள், பெற்றோர், அரசு என, தமிழகமே எதிர்பார்க்கும் சமச்சீர் கல்வி வழக்கில், சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது. சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கும் உத்தரவை, அரசு அமல்படுத்தியே ஆக வேண்டும். ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு சமச்சீர் கல்வியை, தமிழக அரசு, கடந்த ஆண்டு அமல்படுத்தியது. இந்த கல்வியாண்டு முதல், மற்ற வகுப்புகளுக்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆட்சி மாறியதும், சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதை தள்ளிவைக்கும் வகையில், தமிழக அரசு சட்டத் திருத்தத்தை, சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றியது. இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து, பெற்றோர், மாணவர்கள் தரப்பில், சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சட்டத் திருத்தத்துக்கு ஐகோர்ட் தடை விதித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தது. அப்பீல் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், "சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் வழிமுறைகளை ஆய்வு செய்ய, தமிழக அரசு, ஒரு குழுவை அமைக்க வேண்டும். அக்குழு அளிக்கும் அறிக்கையை ஆராய்ந்து, பிரதான வழக்கை ஐகோர்ட் விசாரித்து முடிக்க வேண்டும்' என உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, தலைமைச் செயலர் மற்றும் எட்டு பேர் அடங்கிய குழுவை தமிழக அரசு நியமித்தது. இக்குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது. இதையடுத்து, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்', தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்தது. இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்தவும், அதற்கான பாடப் புத்தகங்களை உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலைப் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் பொதுச் செயலர் கிறிஸ்துதாஸ் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தங்கள் தரப்பையும் சேர்க்கக்கோரி, பெற்றோர், மாணவர்கள் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுக்களை நீதிபதிகள் பாஞ்சால், தீபக்வர்மா, சவுகான் அடங்கிய, "பெஞ்ச்' விசாரித்தது. ஆறு நாட்களாக தொடர்ந்து வழக்கறிஞர்களின் வாதம் நடந்தது. தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.பி.ராவ், அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், கூடுதல் அட்வகேட்-ஜெனரல் குரு கிருஷ்ணகுமார், பெற்றோர், மாணவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அந்தியர்ஜுனா உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.
சமச்சீர் கல்விக்கான பாடத் திட்டம், பாடப் புத்தகங்கள் தரமானதாக இல்லை; உலக அளவில் தமிழக மாணவர்கள் போட்டியிடும் வகையில் தரமானதாக இல்லை; சமச்சீர் கல்வி பாடத் திட்டம், பாடப் புத்தகங்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து, அடுத்த ஆண்டில் அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடினர். மேலும், கடந்த ஆண்டு ஏப்ரலில் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுகளில் பலவற்றை அமல்படுத்தவில்லை என்றும் தேசிய பாடத்திட்ட வடிவமைப்பின் பரிந்துரைகளின்படி தற்போதைய பாடத் திட்டத்தில் படைப்பாற்றல் திறனை வளர்க்க வாய்ப்பில்லை என்றும் எனவே, சமச்சீர் பாடத் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக தான் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது என, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

மாணவர்கள், பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "எந்த ஆதாரமும் இல்லாமல், சமச்சீர் கல்வியை ரத்து செய்யும் நோக்கில் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. தமிழக அரசின் நடவடிக்கையால், 1 கோடியே, 20 லட்சம் மாணவர்களின் படிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி எப்போது அமல்படுத்தப்படும் என, திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. சமச்சீர் கல்வியை ரத்து செய்யும் நோக்கில் தான் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. முந்தைய அரசு செய்தது என்பதற்காக, மாணவர்களின் நலன்களை புறக்கணித்து அரசியல் ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும்' என வாதாடினர். இருதரப்பு வாதங்களும் கடந்த வாரம் முடிந்த நிலையில், இவ்வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் ,"பெஞ்ச்' கடந்த 4ம் தேதி தள்ளிவைத்தது.

பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இவ்வழக்கின் மீது, இன்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மாணவர்கள், பெற்றோர், அரசு என, தமிழகமே இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்பார்க்கின்றனர். இவ்வழக்கில், சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கும் உத்தரவை, தமிழக அரசு அமல்படுத்தியே தீர வேண்டும். தீர்ப்பு வெளியானதும், பள்ளி மாணவ , மாணவியருக்கு புத்தகங்கள் வழங்குவதற்கான நடவடிக்கையை இன்றோ, நாளையோ துவங்கும் வகையில், எந்த சூழ்நிலையையும் சமாளிக்க அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

THANKS 

Dinamalar - No 1 Tamil News Paper

No comments: