About Me

Sunday, October 9, 2011

துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணி நிரவல் இல்லை:மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கும் அபாயம்

சேலம்:தமிழக துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், பல ஆண்டுகளாகப் பணி நிரவல் நடத்தப்படாமல் உள்ளதால், பல பள்ளிகளில் ஆசிரியர் பணியிட பற்றாக்குறையால், மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
ஒரு சில பள்ளிகளில் அதிக மாணவர்களும், ஒரு சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவதும் இயல்பான ஒன்று தான். இதைச் சமாளிக்க, ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை முடிந்த பின், எண் 525 அரசாணைப்படி, பணி நிரவல் நடத்த வேண்டும்.இதில், உபரியாக ஆசிரியர் பணியிடங்கள் இருப்பின், அந்த ஆசிரியர் வேறு பற்றாக்குறை ஆசிரியர் பணியிடம் உள்ள பள்ளிக்கு மாற்றப்படுவார். மாணவர்கள் அதிகமாக இருந்து, ஆசிரியர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாவிட்டால், புதிய ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படும்.பணி நிரவல், முதலில் ஒன்றிய அளவிலும், பின் மாவட்ட மற்றும் மாநில அளவிலும் நடத்தப்படும். இதன் மூலம், அனைத்துப் பள்ளிகளிலும் போதுமான ஆசிரியர்கள் இருப்பது மட்டுமின்றி, அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர் - மாணவர் விகிதம், சமநிலையில் இருக்கும்.ஆனால், தமிழகத்தில், இரு ஆண்டுகளாக இந்த பணி நிரவல் நடத்தவில்லை. இதனால், பல பள்ளிகளில் குறைந்த மாணவர்களுக்கு, அளவுக்கு மிஞ்சிய ஆசிரியர்களும், சில பள்ளிகளில் பற்றாக்குறை ஆசிரியர்களும் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையால், கல்வித் தரம் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என, ஆசிரியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை, கிராமப்புறங்களில் மட்டுமே மாணவர்கள் எண்ணிக்கை குறையாமல், சராசரியாக இருந்து வருகிறது. ஆனால், அங்கு பணியாற்றுவதற்கு ஆசிரியர்கள் விருப்பம் கொள்வதில்லை. மாணவர்கள் அதிகம் என்பதால், வேலைப்பளு அதிகம் மற்றும் வசதிக் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால், நகர்ப்புற பள்ளிக்கு மாறுதல் பெறவே விரும்புகின்றனர். ஆண்டுதோறும் நடக்கும் இடமாறுதல் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு, மாறுதலும் பெற்று விடுகின்றனர். இதனால், கிராமப்புற பள்ளிகளில் சராசரியாக, 20 சதவீத பணியிடங்கள் தொடர்ந்து காலிப்பணியிடமாகவே இருந்து வருகின்றன.
மேலும், துவக்கப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏ.பி.எல்., முறையில், அதிக மாணவர்களை கொண்டு கற்றுத்தருவது மிகவும் சிரமமான விஷயம்.நகர்ப்புறங்களில் உபரியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நீக்குவதற்கு, ஆசிரியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், பல ஆண்டுகளாக பணி நிரவல் நடத்தப்படாமல் உள்ளது. இதற்காக, ஆசிரியர் மாணவர் விகிதத்தையும், கடந்த ஆண்டு அரசு குறைத்தது. ஆனாலும், கிராமப்பகுதிகளில் அதிக ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. ஆண்டுக்காண்டு பணி நிரவல் நடத்தினால், கல்வித்தரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால், நடப்பு கல்வியாண்டிலாவது பணி நிரவல் நடத்த, தமிழக அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments: