கன்னியாகுமரி : காந்தி ஜெயந்தி விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை பகல் 12 மணிக்கு கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் அபூர்வ சூரிய ஒளி விழும்.தேச விடுதலைக்காக பாடுபட்ட காந்திஜி 1948ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் டில்லியில் தகனம் செய்யப்பட்டு பின்னர் அவரது அஸ்தியை கலசங்களில் சேகரித்து நாட்டின் புனித நதிகள், கடல்கள், மலைகளில் தூவவும், கரைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. 1948ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி காந்தியடிகளின் அஸ்தி போதுமக்களின் அஞ்சலிக்காக கன்னியகுமரி கடற்கரையில் வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் அஸ்தி கடலில் கரைக்கப்ப்டடது. அந்த நாளை நினைவு கூறும் வகையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய இடத்தில் நினைவுமண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டு 1954ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1956ம் ஆண்டு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.குமரி கடற்கரையில் சுமார் அரை ஏக்கர் நிலப்பரப்பில் 79 அடி உயரத்தில் இந்திய கலாசாரம், பண்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக அகிம்சை, சமாதானம், வாய்மை என்ற தத்துவத்தின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ள இந்த மண்டபத்தின் உள்பக்கம் காந்தியடிகளின் வாழ்க்கையையும், தலைவர்களோடு இருக்கும் அரிய புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தினக் மேல்பகுதியில் நின்று கன்னியாகுமரியின் இயற்கை பேரழகை கண்டு ரசிக்க முடியும்.இந்த மண்டபத்தின் முக்கிய அம்சம் என்பது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ம் தேதி பகல் 12 மணிக்கு காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் சூரிய ஒளி விழும். இந்த அபூர்வ காட்சியை காண ஆண்டு தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு கூடுகின்றனர்.இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி விழா நாளை (2ம் தேதி) கொண்டாடப்படுகிறது. காலை 9 மணியளவில் துவங்கும் இந்த விழாவில் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர். நிகழ்ச்சியை முன்னிட்டு நூற்பு வேள்வி நடக்கிறது.
No comments:
Post a Comment