About Me

Sunday, January 1, 2012

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பொங்கல் பரிசு(போனஸ்) - அரசு அறிவிப்பு

ஒளிவு மறைவற்ற, திறமை மிக்க மற்றும் பொறுப்புள்ள நிர்வாகத்தை அளிப்பது தான் ஒரு நல்ல அரசின் இலக்கணம் என்ற அடிப்படையில்  மாண்புமிகு தமிழக முதலமைச்சர்  செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.   அரசால் வகுக்கப்படும் அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் உரிய நேரத்தில் மக்களை சென்று அடைய அரசுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்படுபவர்கள் அரசு ஊழியர்கள்.அரசின் பல்வேறு நலத்திட்டப் பணிகளும் மற்றும் வளர்ச்சிப் பணிகளும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதற்கு  உதவிகரமாக விளங்கும் அரசு ஊழியர்களுக்கு  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகை ஊதியம்   (Bonus)  வழங்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

 இதன்படி, 2010-2011 ஆம் ஆண்டிற்கு சிமற்றும் டிபிரிவைச் (C & D Group) சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக ரூ.3,000/- உச்சவரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் (Bonus)  வழங்கிடவும், ‘ஏ மற்றும் பிபிரிவைச் (A & B Group)  சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் ரூ.1,000/-  சிறப்பு போனஸ் வழங்கிடவும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்கள் (முன்னாள் தலையாரி, கர்ணம்) ஏனையோர்களுக்கு ரூ.500/-  பொங்கல் பரிசு வழங்கிடவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர்  செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெறும் முழு நேர மற்றும் பகுதி நேர சில்லரைச்  செலவினப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், சிறப்புக் கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள்/ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் (Mini Anganwadi Workers),   குறு அங்கன்வாடி பணியாளர்கள் ( Anganwadi Workers),  கிராம உதவியாளர்கள்  (Village Assistants), ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் பணிபுரிந்து வரும் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் (special time scale of pay)  உள்ள பஞ்சாயத்து உதவியாளர்கள் (Panchayat Assistants),  மக்கள் நலப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் மற்றும் ஒரு பகுதி தினக்கூலிகளாக பணியாற்றி பின்னர் தொடர்ந்து நிரந்தர பணியாளர்களாக பணியாற்றியவர்களுக்கும் சிறப்பு மிகை ஊதியம்  ரூ.1,000/- (ரூபாய் ஆயிரம் மட்டும்) வழங்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

 உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக்குழு/அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு/இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சம்பள விகிதம் மற்றும் அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் வரும்  அனைவருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும். இதனால் அரசுக்கு சுமார் 264 கோடி ரூபாய்  செலவாகும்.

No comments: